search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணி பெண்கள்"

    • அரியப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒருவர் மட்டுமே பணிக்கு வருவதாக கூறப்படுகிறது.
    • ஸ்கேன் பார்ப்பதற்கு செல்லும் கர்ப்பிணி பெண்களை அலைக்கழிப்பதாக கூறுகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி தாலுகா திப்பனம்பட்டி கிராமம் அரியப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 மருத்துவர்கள் பணியாற்றி வந்தநிலையில் கடந்த 6 மாத காலமாக ஒருவர் மட்டுமே பணிக்கு வருவதாக கூறப்படுகிறது.

    வாரத்தில் செவ்வாய்க் கிழமை தோறும் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரி சோதனைகள் செய்வதற்கு மருத்துவர் இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது.

    இங்கு பணியில், இருக்கும் ஒரு மருத்துவரும் கர்ப்பிணி பெண்களிடம் கூறும் பதில், தென்காசிக்கு செல்லுங்கள். இங்கே நான் ஒருவர் என்ன செய்ய முடியும். அதனால் ஸ்கேன் பார்ப்பதற்கு தென்காசிக்கு செல்லுங்கள் என்று கூறுகிறார். தென்காசி சென்றால் அங்கும் இன்று போய் நாளைவா என்று கூறி கர்ப்பிணி பெண்களை அலைக்கழிப்பதாக புகார் கூறுகின்றனர்.

    தினசரி கூலிக்கு வேலைக்கு செல்லும் நபர்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பி உள்ளனர். இவர்கள் தென்காசிக்கு செல்வதற்கு இங்கிருந்து பஸ் போக்கு வரத்து வசதிகள் ஏதும் கிடையாது.

    எனவே இதை கவனத்தில் கொண்டு கர்ப்பிணி பெண்கள் நலன்கருதி தேவையான மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழன் மக்கள் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • கயத்தாறில் கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அரசின் ஊட்டச்சத்து உணவு பெட்டகம் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

    கயத்தாறு:

    கயத்தாறில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 100 கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பெட்டகத்தை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட அலுவலர் வீரபுத்திரன், கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், டாக்டர் திலகவதி ஆகியோர் வரவேற்று பேசினர்.

    கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னபாண்டியன், மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, நகர செயலாளர் சுரேஷ்கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கருப்பசாமிபாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை, அங்கன்வாடி வட்டார அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:-

    தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முதலில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் சார்பில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

    இந்த ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க கர்ப்பிணி பெண்கள் எந்தவித சத்து குறைபாடுகள் இல்லாமல் பிறக்கும் குழந்தைகள் 100 சதவீதம் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்றும், ஊட்டச்சத்து குறை பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு சார்பில் உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களை சிறப்பாக வளர்ச்சி அடைய தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    கர்ப்பிணி பெண்களுக்கு கருவுற்ற நாள் முதல் குழந்தை வளர்ச்சி அடையும் வரை 'கோல்டன்' நாட்களாகும். ஆகவே மகிழ்ச்சியாக இருந்து ஆரோக்கியமான குழந்தைகள் பெற்று வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட பிரிவு அலுவலர்கள், கயத்தாறு வட்டார வளர்ச்சி துறை அலுவலர்கள்உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.
    • விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.தமிழக மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசினார்.

    மின்சார சிக்கன வார விழா

    மின்சார சிக்கன வாரவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் உப மின் நிலையத்தில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூரில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், காய்கறி பிரியாணி போன்றவை வழங்கபட்டது.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், தமிழக அரசின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    தி.மு.க. மாவட்ட செயலா ளரும், சட்டமன்ற உறுப்பி னருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் 286 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், கமுதி நகர செயலாளர் பாலமுருகன், அபிராமம் நகர செயலாளர் முத்து ஜாகிர்உசேன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை, ராஜ கோபால், ஒன்றிய கவுன்சி லர்கள் முத்துக்கிளி, உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், நாகமணி, காவடிமுருகன் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    அனைவரும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர். பின்னர் தமிழக அரசின் சார்பில் வளையல், குங்குமம், சேலை, அனைத்து வகை பழங்களுடன் கொண்ட சில்வர் தட்டு வழங்கப்பட்டது.

    பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், காய்கறி பிரியாணி போன்றவை வழங்கபட்டது.

    • 2 முதல் 5 வயது 24,186 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியுடன் மதிய உணவு, 3 நாட்களுக்கு முட்டை வழங்கப்படுகின்றது.
    • குழந்தைக்கு 6 மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்ட அளவிலான கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் உள்ள என்பிஆர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத் தலைமை தாங்கினார்.

    தி.மு.க. மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன், மறைமலைநகர் நகரமன்ற தலைவர் ஜெ.சண்முகம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், துணைத்தலைவர் ஆராமுதன், மறைமலைநகர் துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர் ஆப்பூர், சந்தானம், மாவட்ட திட்ட அலுவலர் சற்குணா ஆகியோர் கலந்துகொண்டு 350 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி, மாலை அணிவித்து, வளையல்கள் பூட்டப்பட்டு, நலங்கு வைத்து வளைகாப்பு விழா நடத்தினர்.

    பின்னர் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வாழ்த்துக்கள் கூறினர். மேலும் இந்த விழாவில் ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகை உணவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டன.

    இவ்விழாவில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1266 குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களின் 6 மாதம் முதல் 6 வயது வரை 55391 குழந்தைகள், 8878 கர்ப்பிணி பெண்கள், 6909 பாலூட்டும் தாய்மார்கள் பதிவு செய்யப்பட்டு இணை உணவு வழங்கப்படுகின்றது.

    2 முதல் 5 வயது 24,186 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியுடன் மதிய உணவு (ம) 3 நாட்களுக்கு முட்டை வழங்கப்படுகின்றது. பிறந்தது முதல் 6 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மாதாமாதம் எடை (ம) உயரம் எடுத்து அவர்களின் ஊட்டச்சத்து நிலை கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    பெண்கள் கர்ப்பம் என்று தெரிந்தவுடன் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையம் மற்றும் குழந்தைகள் மையத்தில் பதிவு செய்து கொண்டு, குழந்தைகள் மையத்தில் வழங்கும் இணை உணவு பெற்றுக்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். இரும்பு சத்து, போலிக் அமிலம் (ம) சுண்ணாம்பு சத்து மாத்திரைகள் தவறாமல் உட்கொள்ளுதல் வேண்டும். பிறக்கும் குழந்தை 2.5 கிலோ எடைவுடன் பிறக்கவும், தாய் இரத்தசோகையால் பாதிக்கப்படாமல் இருக்கவும் தினமும் சரிவிகித சத்தான உணவு (ம) இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.

    குழந்தை பிறந்த 1/2 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 6 மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 7 மாதம் முதல் தாய்ப்பாலுடன் இணை உணவும் வழங்க வேண்டும். கர்ப்ப கால மற்றும் பாலூட்டும் காலத்தில் தாய் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். இதற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.




    • 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீதன பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
    • ரூ.43 ஆயிரம் மதிப்பில் முதியோர், ஆதரவற்ற விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை வழங்கினார்.

    மேலும் கர்ப்பிணி பெண்களின் இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் இரும்பு பெண்மணி என்ற சிறப்பு திட்டத்தையும் தொடங்கி வைத்து, இரும்பு சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அமைச்சர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

    கருப்பு உலர் திராட்சை, உலர் அத்தி பழம், சிவப்பு அவல், புரதச்சத்து மற்றும் இரும்புச் சத்து பொருட்கள் அடங்கிய இந்த தொகுப்பு மாதம் ஒரு முறை 3 மாதங்களுக்கு வழங்கப்படும். பின்னர் 43 பயனாளி களுக்கு ரூ.43 ஆயிரம் மதிப்பில் முதியோர், ஆதரவற்ற விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி பேசினார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் யசோதாமணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், திருச்சுழி யூனியன் தலைவர் பொன்னுதம்பி, வட்டாட்சியர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
    • கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சொந்த செலவில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே,100கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. பல்லடம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், கணபதி பாளையம் ஊராட்சி ஆகியவை இணைந்து 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் சவுடேஸ்வரி அம்மன் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் இலபத்மநாபன், முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம், கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தம்பதியினர் ரூ.1 லட்சம் சொந்த செலவில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர்.

    கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசையாக வளையல்கள், புடவை, தட்டு, பூ, மஞ்சள், குங்குமம், மற்றும் 5 வகையான உணவுகளுடன் மதிய விருந்து வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் மூலம் ஊக்கத் தொகை ரூ.18 ஆயிரம், ரூ 2 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம், ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் சுகாதாரத் துறையால் கர்ப்ப கால முன்பின் பராமரிப்பு முறைகள், குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறைகள் ,குழந்தை வளர்ப்பு தடுப்பூசிகள் போன்ற பல தகவல்கள் கர்ப்பிணி பெண்களுக்கு எடுத்துக் கூறப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா, ஒருங்கிணைப்பாளர்கள் துளசிமணி,கவிதா, பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கோவிந்தசாமி, ஈஸ்வர மகாலிங்கம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துக்குமார், வார்டு கவுன்சிலர்கள் ரவி தண்டபாணி, ருக்மணி வீரப்பன், தி.மு.க. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ரத்தினசாமி, கீர்த்தி சுப்பிரமணியம்,ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சின்னப்பன், மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • விழாவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    ராஜபாளையம்,

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள குமாரசாமி ராஜா திருமண மண்டபத்தில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், கர்ப்பிணிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டின் முன்னிலை வகித்தார்.

    விழாவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு சேலை, ஊட்டச்சத்து பொருட்கள், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை 1000 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசிதாவது:-

    வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மையும் கிடைக்காமல், குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது.

    சாதி, மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பயன்பெறுவார்கள். பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பகால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணி தாய்மார்களை சென்றடைய செய்து, அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உயர்த்துதல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துதல், மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், குழந்தைகளின் வளர்ச்சிப்படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகப்பேறு உதவித்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள், இணை உணவின் அவசியம், குழந்தைகள் நோய் வாய்ப்படும் போது அளிக்கப்பட வேண்டிய கவனிப்பு போன்ற பல விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பிணிதாய்மார்களும், கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சிங்கராஜா, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, ராஜபாளையம் வட்டாட்சியர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×